Wednesday, August 11, 2010

இஸ்லாத்தை முறிக்கும் 10 விஷயங்கள்!

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அன்பும் அருளும் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் ‎அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் அவர்களின் நேரான வழியைப் பின்பற்றுவோர் அனைவரின் ‎மீதும் என்றென்றும் பொழியட்டுமாக!‎

‏﴿ ذَلِكَ بِأَنَّ الَّذِينَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَأَنَّ الَّذِينَ آمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَبِّهِمْ كَذَلِكَ ‏يَضْرِبُ اللَّهُ لِلنَّاسِ أَمْثَالَهُمْ ﴾‏

ஈமான் கொண்டோரே! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள்! மேலும் (அவனுடைய) தூதருக்கு கீழ்படியுங்கள்! (மாறு ‎செய்து) உங்கள் அமல்களை வீணாக்கிவிடாதீர்கள்! (அல்குர்ஆன் 47:33)‎

முஸ்லிம் சகோதரரே! அல்லாஹ் தனது அடியார்கள் அனைவரின் மீதும் இஸ்லாத்தை ஏற்பதையும் அதில் ‎உறுதியாக இருப்பதையும் இஸ்லாத்திற்கு மாற்றமான அனைத்து விஷயங்களிலும் மிகவும் எச்சரிக்கையாக ‎இருப்பதையும் கடமையாக்கியுள்ளான். ‎

மேலும் இஸ்லாத்தின்பால் மக்களை அழைப்பதற்காகத்தான் தனது தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை ‎அனுப்பி வைத்தான். மேலும் அவர்களை பின்பற்றுபவர் நிச்சயமாக நேர்வழி பெற்றுவிட்டார். அவர்களை ‎புறக்கணிப்பவர் நிச்சயமாக வழிகெட்டுவிட்டார் என்றும் அறிவித்துவிட்டான்.‎

மனிதன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறக் காரணமாக இருக்கும் அனைத்துச் செயல்களையும், ‎இணைவைத்தல் மற்றும் இறை நிராகரிப்பின் அனைத்து வகைகளையும் அல்லாஹ் அல்குர்ஆனில் பல ‎இடங்களில் கூறி எச்சரிக்கின்றான்.‎

ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை முறிக்கும் பல காரியங்களால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறான். ‎அதனால் அவனுடைய உயிரும் உடமையும் இஸ்லாத்தின் பாதுகாப்பிலிருந்து நீங்கிவிடுகிறது. ‎

மேலும் அக்காரியத்தை செய்ததினால் இஸ்லாத்தை விட்டே அவன் வெளியேறியவனாகிறான் என்ற ‎செய்திகளை மார்க்க அறிஞர்கள் மதம் மாறியவனைப் பற்றிய சட்டத்தின் கீழ் குறிப்பிடுகின்றார்கள்.‎

இஸ்லாத்தை முறிக்கும் செயல்களில் மிகவும் ஆபத்தான, மக்கள் மத்தியில் அதிகமாக நிகழ்ந்து ‎கொண்டிருக்கும் பத்து விஷயங்களை அஷ்ஷைக் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) மற்றும் ‎அவர்களைப் போன்ற அறிஞர்கள் தொகுத்தளித்துள்ளார்கள். ‎

அவைகளை விட்டும் தாங்களும் விலகி, பிறரையும் எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும் அவைகளை ‎விட்டும் முற்றிலும் பாதுகாப்பு பெறவேண்டும் என்பதற்காகவும் சிறிய விளக்கங்களுடன், சுருக்கமாக ‎தங்களுக்கு முன்வைக்கிறேன். அவை:‎

‎(1) அல்லாஹ்வுக்காக மட்டுமே நிறைவேற்ற வேண்டிய வணக்க, வழிபாடுகளில் பிறரை இணையாக்குதல், உதாரணமாக, இறந்தவர்களிடம் பிரார்த்திப்பது, அவர்களிடம் பாதுகாவல் தேடுவது, அவர்களுக்காக ‎நேர்ச்சை செய்வது, அவர்களுக்காக பிராணிகளை அறுத்துப்பலியிடுவது. அல்லாஹ் கூறுகிறான்:‎

‏﴿ إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ افْتَرَى ‏إِثْمًا عَظِيمًا﴾‏

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான் இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் ‎நாடியவர்களுக்கு மன்னிப்பான்.(அல்குர்ஆன் 4 :48) ‎

‏﴿ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ ﴾‏

எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ‎ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவுபவர் ‎எவருமில்லை. (அல்குர்ஆன் 5:72)‎

‎(2) அல்லாஹ்வுக்கும் தமக்கும் மத்தியில் இடைத்தரகை ஏற்படுத்தி, அவர்களிடம் பிரார்த்திப்பவன், ‎இறந்தவர்களிடம் பரிந்துரைக்க வேண்டுபவன், அவர்கள் மீது தவக்குல் நம்பிக்கைவைப்பவன் எவ்வித ‎கருத்து வேறுபாடின்றி நிச்சயமாக அவன் நிராகரித்து விட்டான்.‎

‎(3) இணைவைப்பாளர்களை இறைநிராகரிப்பாளர்கள் என கருதாவிட்டாலோ, அல்லது அவர்களின் ‎நிராகரிப்பை சந்தேகித்தாலோ, அல்லது அவர்களின் மதங்களை சரிகண்டாலோ அவனும் நிராகரித்தவன் ‎ஆகிவிட்டான்.‎

‎(4) நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை விட பிறரின் வழிகாட்டுதல் பரிபூரணமானது என்றோ, நபி(ஸல்) ‎அவர்கள் வகுத்தளித்த சட்டங்களை விட பிறருடைய சட்டங்கள் சிறந்தது என்றோ கருதினால் அவனும் ‎நிராகரித்தவனாகி விட்டான். நபி(ஸல்) அவர்களின் சட்டங்களை விட ஷைத்தான் - தாகூத் - களின் ‎சட்டங்களை சிலர் மேன்மைப்படுத்துவதும் இதில் அடங்கும்.‎

‎(5) எவரேனும் நபி(ஸல்) அவர்கள் கொண்டுவந்தவற்றில் எதையேனும் ஒன்றை வெறுத்தால் நிச்சயமாக ‎அவனும் நிராகரித்தவனாகி விட்டான். அவ்வெறுப்புடன் அவன் அதனை செய்து கொண்டிருந்தாலும் சரியே! ‎அல்லாஹ் கூறுகிறான்:‎

‏﴿ ذَلِكَ بِأَنَّهُمْ اتَّبَعُوا مَا أَسْخَطَ اللَّهَ وَكَرِهُوا رِضْوَانَهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ ﴾‏

ஏனெனில் நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை ‎வெறுத்தமையால் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கிவிட்டான். (அல்குர்ஆன் ‎‎47:28)‎

‎ (6) நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஏதேனும் ஒன்றையோ, அல்லது - மார்க்கத்தின் - ‎தண்டனையையோ, கூலியையோ கேளிசெய்பவனும் நிராகரித்தவனாகி விட்டான். அல்லாஹ் கூறுகிறான்:‎

‏﴿ وَلَئِنْ سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ ‏لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إِنْ نَعْفُ عَنْ طَائِفَةٍ مِنْكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا ‏مُجْرِمِينَ ﴾‏

‎ "அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு ‎இருந்தீர்கள்?" என்று (நபியே!) நீர் கேட்பீராக. காரணம் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் ‎நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள். (அல்குர்ஆன் 9:65-66)‎

‎ (7) சூனியம்: நல்ல தொடர்புகளை பிரிப்பதற்காகவோ, தீயவற்றை ஆசையூட்டவோ சூனியம் செய்வது.

உதாரணமாக, ஒருவன் தன் மனைவி மீது கொண்டுள்ள அன்பை கோபமாக மாற்றுவது, அல்லது அவன் ‎விரும்பாதவற்றை ஆசையூட்டுவது.‎

இவை அனைத்தும் ஷைத்தானுடைய வழிமுறைகளிலேயே செய்யப்படுகின்றன. எனவே யாரேனும் ‎இதனைச் செய்தாலோ, அல்லது அதனை பொருந்திக் கொண்டாலோ அவனும் நிராகரித்தவனாகி விட்டான். ‎

அல்லாஹ் கூறுகிறான்:‎

‏﴿ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ ﴾‏

அவர்கள் இருவரும் "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் ‎காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் ‎கொடுக்கவில்லை. (அல்குர்ஆன் 2:102)‎

‎(8) இணைவைப்பாளர்களை ஆதரிப்பதும் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவுவதும் இஸ்லாத்தை ‎முறித்துவிடும். அல்லாஹ் கூறுகிறான்:‎

‏﴿ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَنْ يَتَوَلَّهُمْ ‏مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ﴾‏

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் ‎கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக ‎இருக்கின்றனர் உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் ‎அவர்களைச் சேர்ந்தவர்தான் நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி ‎காட்டமாட்டான்.(அல்குர்ஆன் 5:51)‎

‎ (9) கிழ்ர் அவர்களுக்கு மூஸா(அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றாமல் இருப்பதற்கு ‎அனுமதியிருந்தது போன்று இச்சமுதாயத்தில் (குறிப்பிட்ட) சிலர் நபி(ஸல்) அவர்களின் மார்க்கத்திலிருந்து ‎வெளியேற அனுமதியுள்ளது என்று நம்புபவன் நிராகரிப்பாளனாகி விட்டான். அல்லாஹ் கூறுகிறான்:‎

‏﴿ وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنْ الْخَاسِرِينَ ﴾‏

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் ‎கொள்ளப்பட மாட்டாது மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் ‎இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)‎

‎(10) அல்லாஹ்வின் மார்க்கத்தை முற்றிலும் புறக்கணித்து, அதனைக் கற்றுக் கொள்ளாமலோ, அதன்படி ‎செயல்படாமலோ இருப்பதும் இஸ்லாத்தை முறித்துவிடும். அல்லாஹ் கூறுகிறான்:‎

‏﴿ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنْ الْمُجْرِمِينَ مُنتَقِمُونَ﴾‏

எவர் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் ‎புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் ‎‎(இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.(அல்குர்ஆன் 32:22)‎

இஸ்லாத்தை முறிக்கும் மேற்கூறிய செயல்களை வேண்டுமென்றே செய்வதற்கும் விளையாட்டாகவோ, ‎பயந்தோ செய்வதற்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் கிடையாது. நிர்ப்பந்திக்கப்பட்டவரை தவிர. இவை ‎அனைத்தும் மிகக் கொடிய விளைவை ஏற்படுத்தக் கூடிய, நம் சமுதாயத்தில் அதிகமாக மலிந்து கிடக்கும் ‎செயல்களாகும். ‎

எனவே ஒவ்வொரு முஸ்லிம் இவ்விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவை ‎தம் வாழ்வில் நிகழ்ந்து விடக்கூடாது என மிகவும் பயப்பட வேண்டும்.‎

அல்லாஹ்வுடைய கோபத்தையும் அவனுடைய கடும் தண்டனையை பெற்றுத் தறும் விஷயங்களையும் ‎விட்டு அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!‎

படைப்பினங்களில் சிறந்தவர்களான முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ‎தோழர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ் அருட்செய்வானாக!‎

இஸ்லாத்தை முறிக்கும் காரியங்களில் நாம் மேற்கூறிய நான்காவது வகையில் கீழ் காண்பவைகளும் ‎இடம்பெறும்:‎

‎1) மனிதன் தொகுத்த சட்டங்களையும் நெறிமுறைகளையும் இஸ்லாமிய ஷரீஅத்தை விட சிறந்தது ‎என்றோ, அது இஸ்லாத்தின் சட்டத்திற்கு சமமானது என்றோ, இஸ்லாத்தின் சட்டங்களே சிறந்தது எனினும் ‎மனிதன் தொகுத்த சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்புக் கூறுவது கூடும் என்றோ கருதுவது.‎

‎2) இஸ்லாமிய சட்டதிட்டங்கள் இருபதாம் நூற்றாண்டிற்கு பொருந்தாது என்றோ, முஸ்லிம்கள் ‎பின்தங்குவதற்கு இஸ்லாமே காரணம் என்றோ, இஸ்லாத்திற்கும் உலக வாழ்விற்கும் எந்தத் தொடர்பும் ‎கிடையாது.அது மனிதன் இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு மட்டும் தான் என்றோ ‎கருதுவது.‎

‎3) இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்துவது இக்காலத்திற்கு பொருந்தாது என்று கூறுவது.‎

‎4) மார்க்க செயல்பாடுகள், குற்றவியல் சட்டங்கள் மற்றும் இவை போன்றவற்றில் அல்லாஹ் ‎இறக்கியருளாத சட்டங்களைக் கொண்டு தீர்ப்பு வழங்குவது கூடும் என்று கருதுவது.

இவ்வாறு கருதுபவன் மார்க்கச் சட்டங்களை விட அவை சிறந்தது என கொள்கையாக நம்பாவிட்டாலும் ‎சரியே! ஏனெனில் அல்லாஹ் இறக்கியருளாத சட்டங்களைக் கொண்டு தீர்ப்பு வழங்குவது கூடும் எனக் ‎கருதுவது - எந்த கருத்து வேறுபாடுமின்றி - நிச்சயமாக அல்லாஹ் தடுத்துள்ளதை ஆகுமாக்குவதாகும், ‎மார்க்கம் கண்டிப்பாக தடுத்துள்ளவைகளை - விபச்சாரம், மது, வட்டி, அல்லாஹ்வுடைய மார்க்கம் ‎அல்லாததைக் கொண்டு தீர்ப்புக் கூறல் - போன்றவைகளை ஆகுமாக்கியவன் நிச்சயமாக - அறிஞர்களின் ‎ஏகோபித்த முடிவின்படி - காஃபிர் ஆகிவிட்டான்.‎

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! அவனுடைய திருப்பொருத்தத்தை பெற்றுத் தரும் ‎காரியங்களை செய்ய அருள்புரிவானாக! நிச்சயமாக அவன் மிக அருகில் இருப்பவன், பிரார்த்தனைக்குப் ‎பதிலளிப்பவன்.‎

நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ் கிருபை ‎செய்வானாக!‎

0 comments:

Post a Comment