Monday, March 26, 2012

மாமனிதர் நபி(ஸல்) - 16 (இறுதி பாகம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த மூன்று நாட்களும் பள்ளிவாசல் மக்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் அவர்களது எளிமை, அடக்கம் போன்ற எல்லாப் பண்புகளையும் அவர் உன்னிப்பாகக் கவனித்து ஆச்சரியப்படுகிறார்.

மாற்றுத் துணிக்குக் கூட வழியில்லாமல் இருக்கும் அந்தச் சமுதாயத்தையும் வெறும் பந்தல் போடப்பட்ட திடலே பள்ளிவாசலாகவும், நபிகள் நாயகத்தின் அரண்மனையாகவும் இருப்பதையும் அவர் காண்கிறார். மக்களை அடிமைகளாக நடத்தாமல் சக தோழர்களாக நபிகள் நடத்தும் விதத்தையும் காண்கிறார்.

இவ்வளவு கஷ்டமான நேரத்திலும் தம்மிடம் ஈட்டுத் தொகை வாங்க வேண்டும் என்று எண்ணாமல் நபிகள் நாயகம் விடுதலை செய்வதையும் அறிந்து பிறகு தான் இஸ்லாம் பற்றியும், நபிகள் நாயகம் பற்றியும் அவர் மனதுக்குள் கற்பனை செய்திருந்த தவறான எண்ணங்கள் விலகின.

இந்தச் சிறிய நிகழ்ச்சியிருந்து இத்தனை விஷயங்களையும் நாம் அறிந்து கொள்கிறோம்.

எதிரிகளிடம் கூட இத்தனை கனிவாக நடந்து கொண்டதால் தான் மக்களின் உள்ளங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வென்றெடுத்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இரும்புக் கவசத்தை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்து அவரிடமிருந்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்.
நூல் : புகாரி 2096, 2252, 2509, 2513, 2068, 2200, 2251, 2386

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எளிமையான வாழ்வுக்குச் சான்றாக இதை முன்னரும் நாம் குறிப்பிட்டுள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் யூதர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருந்தார்கள். மேலும் அவர்களில் பலர் தமது நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் நபிகள் நாயகத்தின் எதிரி நாட்டவர்களுக்குத் தகவல்கள் தந்து ஒத்துழைப்புச் செய்பவர்களாக இருந்தனர்.

நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் இரட்டை வேடம் போட்டு வந்த சமுதாயத்தவர்களை எந்த நாடும் மரியாதையுடன் நடத்துவதில்லை. ஆனால் யூதர்கள் பலவிதமான இடையூறுகள் அளித்த நிலையிலும் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் எந்த அளவு கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட்டனர் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

நாட்டின் அதிபதி அடைமானம் வைக்கக் கூடியவராகவும், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் அடைமானம் பெற்றுக் கொள்பவராகவும் இருந்தனர் என்பதிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விசாலமான உள்ளத்தை அறிந்து கொள்ள முடியும்.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிட்டனர். உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். இவளை நாங்கள் கொன்று விடட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. வேண்டாம் என்று அவர்கள் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள்வாயின் மேற்பகுதியில் நான் பார்ப்பவனாக இருந்தேன் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.
நூல் : புகாரி 2617

நபிகள் நாயகத்திற்கு எதிரிகளாகவும், சிறுபான்மையினராகவும் இருந்த யூத இனத்துப் பெண்மணி விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொண்டு வந்து தந்த போது அதைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் பெருந்தன்மை இருந்தது. அவள் விஷம் கலந்த செய்தி தெரிந்தவுடன் அவள் பிடித்து வரப்பட்டாள். அவளைக் கொன்று விடலாமா? என்று நபித் தோழர்கள் கேட்ட போது, வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் நிலை என்னவென்றால் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு இரக்கம் காட்டக் கூடாது என்பது தான்.

இந்தச் சட்டத்தில் யாருக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) வளைந்ததில்லை. உயர்ந்த குலத்துப் பெண் ஒருத்தி திருடிய போது அவருக்காக பலரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பரிந்துரை செய்த போது என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை வெட்டுவேன் என்று திட்டவட்டமாக அறிவித்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
நூல் : புகாரி : 3475, 3733, 4304, 6787, 6788

சட்டத்தை அமுல்படுத்துவதில் கடும் போக்கை மேற்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய சொந்த விவகாரம் என்றவுடன் மன்னித்து விடுகிறார்கள்.

தமது குடிமக்களில் வேறு யாரையாவது அப்பெண் கொல்ல முயன்றிருந்தால் அவரைக் கடுமையாகத் தண்டித்திருப்பார்கள். கொலை முயற்சி தமக்கு எதிரானது என்பதால் தான் அப்பெண்ணை மன்னித்து விடுகிறார்கள்.

நேருக்கு நேர் நின்று மோதுவதை விட பெண்களை முன்னிறுத்தி கொல்ல முயல்வதும், உணவில் விஷம் கலந்து நம்பிக்கை துரோகம் செய்வதும் மிகவும் கடுமையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள்.

இவ்வாறு துணிவுடன் ஒரு பெண் விஷம் கலந்து கொடுக்கிறார் என்றால் அதற்குப் பலமான பின்னணி இருக்க வேண்டும். திட்டமிட்டவர் யார்? தூண்டியவர் யார்? யாருக்கெல்லாம் இதில் பங்கு உண்டு என்றெல்லாம் விசாரணை நடத்துவது தான் உலக வழக்கம். சாதாரண குடிமக்களுக்காக இவ்வாறு நடத்தப்படாவிட்டாலும் நாட்டின் தலைவர்களின் உயிரோடு விளையாடியவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் தான் எடுக்கப்படும்.

அந்தச் சதியில் சம்மந்தப்பட்டவர் யார் என்பதோடு கூட நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். மாறாகக் குற்றவாளியின் இனத்தைச் சேர்ந்த அப்பாவிகளையும் கூட கொன்று குவிப்பது தான் உலக வழக்கம்.

ஆனால் இந்த மாமனிதரோ, அப்பெண்ணையும் தண்டிக்கவில்லை; அப்பெண்ணுக்குப் பின்னணியில் இருந்தவர் யார் என்பதையும் விசாரிக்கவில்லை. அப்பெண் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவளோ அந்தச் சமுதாயத்தை - யூத சமுதாயத்தை - பழிவாங்கவும் இல்லை.

எதுவுமே நடக்காதது போல் அவர்கள் பதிலளித்ததைக் காணும் எவரும் இந்த மாமனிதரின் பெருந்தன்மைக்கும் மனித நேயத்திற்கும் ஈடானது ஏதுமில்லை என்பதை ஒப்புக் கொள்வார்.
மற்றொரு சான்றைப் பாருங்கள்!

காதிஸிய்யா எனும் இடத்தில் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி), கைஸ் பின் ஸஃது (ரலி) ஆகிய இரு நபித்தோழர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அவர்களை ஒரு பிரேத ஊர்வலம் கடந்து சென்றது. உடனே அவ்விருவரும் எழுந்து நின்றார்கள். 'இறந்தவர் வேறு மதத்தவர்' என்று அவ்விரு நபித்தோழர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவ்விருவரும் பின்வருமாறு கூறினார்கள்:-

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். 'இது யூதருடைய பிரேதம்' என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அதுவும் ஓர் உயிர் அல்லவா?' என்று கேட்டனர்.
நூல் : புகாரி 1313

மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
எங்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. அதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் நின்றோம். 'அல்லாஹ்வின் தூதரே! இது யூதருடைய பிரேதம்' என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீங்கள் பிரேதத்தைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்' எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி 1311

இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் போது இருபதாம் நூற்றாண்டில் கூட கலவரங்கள் நடப்பதைக் காண்கிறோம். எதிரி சமுதாயத்தவரின் உடல்களை எங்கள் தெரு வழியாகக் கொண்டு செல்லக் கூடாது என்று ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களே வெட்டு குத்துக்களில் இறங்குவதையும் காண்கிறோம்.

உயிருடன் இருக்கும் போது நடமாடுவதற்கு அனுமதியளித்தவர்கள் கூட இறந்த உடலுக்கு அந்த உரிமையை வழங்க மறுத்து வருவதைக் காண்கிறோம்.

இந்த மாமனிதரின் இந்த வரலாற்றைப் பாருங்கள்!

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராக இருக்கிறார்கள். அவர்களின் எதிரி சமுதாயமாக யூதர்கள் இருந்தனர். எதிரி சமுதாயத்தைச் சேர்ந்த - சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த - ஒருவரின் உடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் தயக்கமோ, அச்சமோ இன்றி கொண்டு செல்லப்படுகிறது.

முஸ்லிம்களின் ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தினர் வசிக்கும் பகுதி வழியாக, அதுவும் முஸ்லிம் அரசின் அதிபர் வசிக்கும் தெரு வழியாக பிரேதத்தை எடுத்துச் செல்ல சிறுபான்மை மக்களுக்கு எந்த அச்சமும் இருக்கவில்லை. சர்வ சாதாரணமாகப் பிரேதத்தை எடுத்துச் செல்கிறார்கள்.

முஸ்லிம்களின் மனித நேயத்தை அனுபவப் பூர்வமாக அறிந்திருந்ததால் தான் சிறுபான்மை சமுதாயத்தவரால் இப்படி நடந்து கொள்ள முடிந்தது.

பிரேதம் கடந்து செல்லும் போது உள்ளத்தில் வெறுப்பைச் சுமந்து கொண்டு வேண்டா வெறுப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் அமைதி காத்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த உடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியதன் மூலம் உளப்பூர்வமாகவே அனுமதித்தார்கள் என்பதை அறியலாம்.

உயிரோடு இருப்பவருக்காக எழுந்து நின்று மரியாதை செலுத்துவதை அடியோடு தடை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இறந்தவரின் உடலுக்கு மட்டும் எழுந்து நின்று மரியாதை செய்ய அனுமதித்துக் கட்டளையிட்டதன் மூலம் மனித நேயத்தை நிலைபெறச் செய்துள்ளனர்.

இந்த இடத்தில் முஸ்லிம் சமுதாயத்தினர் சில பகுதிகளில் ஈடுபடும் நடவடிக்கைகளை நாம் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.

இறந்தவரின் சவ ஊர்வலம் முஸ்லிம்களின் தெரு வழியாகக் கொண்டு செல்லப்படுவதைக் கடுமையாக எதிர்க்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். இனவெறியைத் தூண்டிவிட்டு 'நமது தெருவில் அவர்களின் பிணம் செல்லலாமா?' என்று மார்க்க அறிவு இல்லாத மக்களை உசுப்பேற்றி விடுகின்றனர். இதன் காரணமாக மற்ற மதத்தினர் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் நஞ்சென வெறுக்கும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்பட்டபின் அவர்கள் எப்படி இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவார்கள் என்ற குறைந்தபட்ச சிந்தனை கூட சில பகுதிகளில் இல்லாமல் போய்விட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்த ஒன்றைத் தடுப்பவர்களும், எதிர்ப்பவர்களும் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முஸ்லிமல்லாதவர்களின் சவ ஊர்வலம் செல்லும் போது தடை செய்வதற்கு நமக்கு அனுமதி இல்லை. பள்ளிவாசல் வழியாகக் கடந்து சென்றாலும் அதைத் தடுப்பது மார்க்கச் சட்டப்படி கடுமையான குற்றமாகும். நபிகள் நாயகத்தை உயிரினும் மேலாக மதிக்கும் யாரும் இது போன்ற செயல்களில் இறங்க மாட்டார்கள்.

பள்ளிவாசல்கள் உள்ள பகுதிகளில் தாரை தப்பட்டை அடித்துச் செல்கிறார்கள் என்றெல்லாம் காரணம் கூறி மக்களைத் தூண்டி விடுவோர் தங்கள் குடும்பத்து விழாக்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதைத் தான் முதல் சிந்திக்க வேண்டும்.
திருமணம், உரூஸ், மீலாது விழா போன்ற ஊர்வலங்களிலும் ஆடல், பாடல், கூத்து கும்மாளம் அனைத்தும் நடக்கின்றன. பள்ளிவாலைக் கடந்தும் செல்கின்றன. தங்கள் குடும்பத்து விழாக்களிலும், ஊர் விழாக்களிலும், மார்க்கத்தின் பெயரால் நடத்தும் விழாக்களிலும் மார்க்கம் தடை செய்துள்ள காரியங்களைச் செய்பவர்கள் அதே காரியங்களை மற்ற மக்கள் நடத்தும் போது மட்டும் ஆத்திரப்பட எந்த உரிமையும் இல்லை.

முஸ்லிமல்லாத மக்களிடம் இது போன்ற இன வெறுப்பைக் காட்டாது இஸ்லாம் கற்றுத் தந்த மனித நேயத்தைக் காட்டினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது எதிரிகளின் உள்ளங்களை வென்றது போல் வெல்ல முடியும் என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனித நேயத்துக்கு எடுத்துக் காட்டாக அமைந்த மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பதிமூன்று ஆண்டுகள் கடுமையான துன்பங்களைச் சந்தித்தார்கள். பலவிதமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இறுதியில் அவர்களைக் கொல்லவும் எதிரிகள் திட்டமிட்டனர்.

இந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களின் நெருங்கிய தோழர் அபூபக்கரும் இரகசியமாக மக்காவை விட்டு வெளியேறி மதினாவுக்குச் செல்ல திட்டமிட்டனர்.

வழக்கமான பாதையில் பயணம் மேற் கொண்டால் எதிரிகளிடம் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதால் குறுக்கு வழியில் மதீனா சென்றடைய வேண்டும் எனத் திட்டமிட்டார்கள்.

குறுக்கு வழியில் பல நூறு மைல்களைக் கடந்து செல்வதாக இருந்தால் பாதைகளைப் பற்றி நன்கு அறிந்த வழிகாட்டி ஒருவர் தேவை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரி சமுதாயத்தவர்களின் மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் தான் தம்மைக் குறுக்குப் பாதையில் அழைத்துச் செல்ல நியமனம் செய்து கொண்டார்கள். அவரை நம்பி தமது பயண ஏற்பாடுகளையும் ஒப்படைத்தனர்.
நூல் : புகாரி 2263, 2264, 3906

உயிருக்கு கடும் அச்சுறுத்தல் நிலவிய கால கட்டத்தில் மதத்தால் வேறுபட்டிருந்தாலும் தொழில் நேர்மையானவர் என்று நம்பப் பட்டவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதையைக் காட்டுபவராக நியமித்துக் கொண்டார்கள்.

இத்தகைய நெருக்கடியான நேரத்தில் எதிரி சமுதாயத்தைச் சேர்ந்தவரை இது போன்ற முக்கியப் பணியில் யாரும் அமர்த்த மாட்டார்கள். அவர் நினைத்தால் எதிரிகள் கையில் பிடித்துக் கொடுத்துவிட முடியும் என்ற நிலையிலும் அவரை நம்பி பொறுப்பை ஒப்படைத்தனர் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனித நேயம் எவ்வளவு ஆழமானது என்பதை அறியலாம்.

பணியில் அமர்த்தப்படுபவரின் நேர்மையையும், நாணயத்தையும் தான் அவர்கள் கருத்தில் கொண்டார்களே தவிர அவர் சார்ந்த மதத்தை நபிகள் நாயகம் (ஸல்) பார்க்கவில்லை என்பதை இந்நிகழ்ச்சியிருந்து அறியலாம்.

அது போல் அமைந்த மற்றொரு வரலாற்றைக் காண்போம்.

முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும், யூத சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரும் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டனர். அப்போது 'அகிலத்தாரை விட முஹம்மதைத் தேர்வு செய்த இறைவன் மேல் ஆணையாக' என்று முஸ்லிம் குறிப்பிட்டார். 'அகிலத்தாரை விட மூஸாவைத் தேர்வு செய்த இறைவன் மேல் ஆணையாக' என்று யூதர் கூறினர். இதைக் கேட்டதும் முஸ்லிம், யூதருடைய முகத்தில் அறைந்து விட்டார். உடனே யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கும், முஸ்லிமுக்கும் இடையே நடந்ததைத் தெரிவித்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமை அழைத்து வரச் செய்து விசாரித்தனர். அவரும் நடந்ததைக் கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மூஸாவை விட என்னைச் சிறப்பித்துக் கூறாதீர்கள். ஏனெனில் நியாயத் தீர்ப்பு நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாவார்கள். அவர்களுடன் நானும் மூர்ச்சையாவேன். நான் தான் முதலில் மூர்ச்சையிலிருந்து விழித்தெழுவேன். ஆனால் அப்போது மூஸா அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு நிற்பார். அவர் மூர்ச்சையடைந்து எனக்கு முன் விழித்தெழுந்தாரா? அல்லது அல்லாஹ் யாருக்கு விதிவிலக்கு அளித்தானோ அவர்களில் அவரும் ஒருவரா? என்பதை நான் அறிய மாட்டேன்' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2411, 2412, 308, 6517, 6518, 7472

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் மக்கள் எத்தகைய உரிமைகள் பெற்று சுதந்திரத்துடன் வாழ்ந்தனர் என்பதற்கும், நபிகள் நாயகத்தின் எல்லையற்ற மனித நேயத்துக்கும் இந்நிகழ்ச்சியும் சான்றாக அமைந்துள்ளது.

யூதரும், முஸ்லிமும் வாய்ச் சண்டை போடும் போது தனது மதத் தலைவரும், நாட்டின் அதிபருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம் உயர்த்திப் பேசுகிறார். அவருக்குச் சற்றும் சளைக்காமல் அது போன்ற வார்த்தையை யூதரும் பயன்படுத்துகிறார்.

தனது நாட்டின் அதிபராக உள்ள நபிகள் நாயகத்தை விட தனது மதத்தின் தலைவராகக் கருதப்பட்ட மூஸா நபியை அவர் சிறப்பித்துக் கூறுகிறார்.

சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களுக்கு அடிமைகளாகவும், அவர்களுக்கு அஞ்சி வாழ்பவர்களாகவும் இருந்திருந்தால் இவ்வளவு தைரியமாக யூதர் இத்தகைய வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் முஸ்லிமுக்கு உள்ள உரிமை தனக்கும் உண்டு என்று அவர் நினைக்கும் அளவுக்கு நேர்மையான ஆட்சி அமைந்திருந்ததால் தான் இவ்வாறு அவர் கூற முடிந்தது.

ஆயினும் முஸ்லிம் இதைச் சகித்துக் கொள்ளாமல் கை நீட்டி விட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான பிரச்சனை என்பதால் தான் கை நீட்டியது நபிகள் நாயகத்தால் கண்டிக்கப் படாது என்று அவர் நினைத்திருக்கிறார்.

ஆனால் அடி வாங்கிய யூதரோ உடனே பிரச்சனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்கிறார். நபிகள் நாயகம் எதிரிகளுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் நீதி வழங்கத் தவற மாட்டார்கள்; தவறு செய்தவர் தனது சகாவாகவே இருந்தாலும் நிச்சயம் அவரைத் தண்டிப்பார்கள் என்று அவர் நம்பியதால் தான் பிரச்சனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்கிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை விசாரித்து விட்டு பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்கள் அனுசரித்து அல்லது அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக உடனே முஸ்லிமை அழைத்து வரச் செய்கிறார்கள்.

முஸ்லிம் தான் குற்றம் செய்திருக்கிறார் என்பது உறுதியானவுடன் தன்னை மூஸா நபியை விட சிறப்பித்துக் கூற வேண்டாம் என்று கூறுகிறார்கள். அது மட்டுமின்றி ஒரு வகையில் மூஸா நபி என்னை விட சிறந்தவராக இருக்கிறார் எனக் கூறி யூதருடைய மனதையும் குளிரச் செய்கிறார்கள்.

முஸ்லிமுக்கு அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன தண்டனை அளித்தார்கள் என்பது கூறப்படாவிட்டாலும் அடிக்கு அடி உதைக்கு உதை என்பது தான் அவர்கள் கொண்டு வந்த சட்டம். இதை யாருக்காகவும் எப்போதும் அவர்கள் வளைத்ததில்லை. பாதிக்கப்பட்டவர் மன்னித்து விட்டால் குற்றவாளியைத் தண்டிக்காது விட்டு விடுவார்கள். பாதிக்கப்பட்டவர் மன்னிக்க மறுத்து விட்டால் அவர் எந்த அளவுக்கு அடித்தாரோ அது போல் திருப்பியடிப்பது தான் வழக்கமாக அவர்கள் வழங்கும் நீதி. இந்த நிகழ்ச்சியின் போதும் இரண்டில் ஒன்று தான் நடந்திருக்க முடியும்.

சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவரால் பாதிப்பு ஏற்படும் போது சாதாரண ஒரு மனிதர் நபிகள் நாயகத்தைச் சந்தித்து முறையிட முடிகின்றது; நியாயம் பெற முடிகின்றது என்பதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எல்லையற்ற மனித நேயத்தை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரிமையியல் (சிவில்) வழக்குகளில் முக்கியமான சட்ட விதியைக் கடைப்பிடிப்பது வழக்கம்.

ஒருவரது கைவசம் உள்ள பொருளுக்கு இன்னொருவர் உரிமை கொண்டாடினால் உரிமை கொண்டாடுபவர் அதற்கான சான்றுகளைக் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

உரிமை கொண்டாடும் வாதியிடம் சான்று ஏதும் இல்லாவிட்டால் யாருடைய கைவசம் அப்பொருள் இருக்கிறதோ அவரை அழைத்து 'இறைவன் மேல் ஆணையாக இது என்னுடையது தான்' எனக் கூறச் சொல்வார்கள். அவ்வாறு கூறிவிட்டால் அப்பொருள் அவருக்குச் சொந்தமானது எனத் தீர்ப்பு அளிப்பார்கள். சத்தியம் செய்ய அவர் மறுத்தால் உரிமை கொண்டாடி வழக்குத் தொடுத்த வாதியிடம் அப்பொருளை ஒப்படைப்பார்கள்.

ஒரு முஸ்லிமுக்கும், யூதருக்கும் இடையே இது போல் உரிமையியல் தொடர்பான வழக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தது. அதன் விபரம் வருமாறு:-

ஒரு முஸ்லிமுடைய பொருளை அபகரிப்பதற்காக யார் பொய்யாகச் சத்தியம் செய்கிறாரோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் அல்லாஹ்வை சந்திப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள். அப்போது அஷ்அஸ் (ரலி) என்ற நபித்தோழர் 'என் விஷயமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். ஒரு நிலம் தொடர்பாக எனக்கும், ஒரு யூதருக்கும் விவகாரம் இருந்தது. அவர் அதை எனக்குத் தர மறுத்தார். அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உன்னிடம் சான்று ஏதும் உள்ளதா?' எனக் கேட்டார்கள். இல்லை' என்று நான் கூறினேன். உடனே யூதரிடம் 'நீ சத்தியம் செய்!' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். உடனே நான் குறுக்கிட்டு 'அல்லாஹ்வின் தூதரே! இவன் சத்தியம் செய்து என் சொத்தை எடுத்துக் கொள்வான் எனக் கூறினேன். அப்போது 3:77 வசனத்தை அல்லாஹ் அருளினான்' என்று அஷ்அஸ் கூறினார்.
நூல் : புகாரி 2357, 2411, 2417, 2516, 2667

பொதுவாக அன்றைய யூதர்கள் பொய்ச் சத்தியம் செய்வதற்கு கொஞ்சமும் கூச்சப்படாதவர்களாக இருந்தனர். முஸ்லிம்களோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நம்பியதால் நபிகள் நாயகம் (ஸல்) முன்னிலையில் பெரும்பாலும் பொய் சொல்ல மாட்டார்கள்.

இந்த நிலையில் யூதர் பொய்ச் சத்தியம் செய்யத் தயங்க மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாரபட்சமான தீர்ப்புக் கூறவில்லை. வழக்கமாக இரண்டு முஸ்லிம்களுக்கிடையில் இது போன்ற விவகாரம் எழுந்தால் எவ்வாறு தீர்ப்பு வழங்குவார்களோ அதே விதியின் கீழ் தான் யூதருக்கும் நீதி வழங்கினார்கள்.

தனது சமுதாயத்தவர், தனது எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று பேதம் பார்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீதி வழங்கியதில்லை என்பதற்கு இதுவும் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலை நகரமான மதீனாவுக்கு அருகில் கைபர் எனும் பகுதியில் யூதர்கள் தனி அரசு நடத்தி வந்தனர். அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நடந்த போரில் யூதர்கள் தோல்வியைத் தழுவினார்கள். தோல்வியடைந்த நாட்டில் தனி மனிதர்களுக்கு உடமையாக இல்லாத அனைத்தும் வெற்றி கொண்டவர்களைச் சேரும் என்பது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதன் படி கைபர் பகுதியில் உள்ள நிலப்பரப்புக்கள் இஸ்லாமிய அரசின் உடமையாக ஆயின.
ஆயினும் கைபர் பகுதியில் வாழ்ந்த யூதர்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக அந்த நிலங்களில் பயிர் செய்யும் உரிமையை யூதர்களுக்கு வழங்கினார்கள். அதில் உற்பத்தியாவதில் பாதி அரசுக்கும், பாதி உழைப்பவருக்கும் உரியது என்ற அடிப்படையில் அவர்களிடமே வழங்கினார்கள். (இதன் பின்னர் அவர்களின் சதி நடவடிக்கை காரணமாக உமர்(ரலி) ஆட்சிக் காலத்தில் அங்கிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள்.)
நூல் : புகாரி: 2499, 2720

நபிகள் நாயகத்தின் கை முழுமையாக ஓங்கியிருக்கும் போது அந்த நிலங்களை முஸ்லிம்களுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்க முடியும். அல்லது அங்கே முஸ்லிம்களைக் குடியமர்த்தி இருக்க முடியும். அவ்வாறு செய்யாமல் யூதர்களின் அரசு செய்த நன்மையை விட யூத மக்களுக்கு அதிக நன்மை தரும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்கள்.
அசாதாரணமான நேரத்தில், குறிப்பாக யுத்த களத்தில் எதிரிகள் மீது யாரும் கருணை காட்ட மாட்டார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமக்கு எதிராக வன்முறையைப் பிரயோகம் செய்ய வந்தவர்களிடமும் இரக்கம் காட்டியதற்குப் பல சான்றுகள் உள்ளன.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நஜ்து எனும் பகுதிக்குப் போர் செய்யப் புறப்பட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரும்பிய போது நானும் திரும்பினேன். முள் மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் பகல் தூக்க நேரம் வந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கினார்கள். மக்கள் மரங்களின் நிழல் தேடிப் பிரிந்து விட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முள் மரத்தின் கீழ் தங்கினார்கள். தமது வாளை அம்மரத்தில் தொங்க விட்டனர். நாங்கள் சிறிது நேரம் தூங்கியிருப்போம், அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தனர். அங்கே அவர்களின் அருகில் கிராமவாசி ஒருவர் இருந்தார். 'நான் தூங்கிய போது இவர் எனது வாளை எடுத்து விட்டார். நான் உடனே விழித்து விட்டேன், இவர் வாளை உருவிக் கொண்டு என்னை விட்டு உம்மைக் காப்பாற்றுபவர் யார்?' எனக் கேட்டார். அல்லாஹ் என்று கூறினேன். அவர் உடனே வாளைக் கீழே போட்டு விட்டார்! என்று கூறினார்கள். அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை, என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 2910, 2913, 4137, 4139

தம்மைக் கொல்ல வந்த எதிரியைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்டிக்காது மன்னித்து விடும் அளவுக்கு அவர்களின் பெருந்தன்மை அமைந்திருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கு கொண்ட ஒரு போர்க்களத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டுக் கிடந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டனர். பெண்களையும், சிறுவர்களையும் கொல்லக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தனர்.
நூல் : புகாரி 3014, 3015

போர் என்று வந்துவிட்டால் மனிதர்கள் மிருகங்களாகவே மாறிவிடுவதை உலகில் காண்கிறோம். அப்பாவிகளும், பெண்களும், சிறுவர்களும் போரில் எவ்விதத்திலும் பங்கு வகிக்காதவர்களும் கொல்லப்படுவதையும் காண்கிறோம். இதெல்லாம் போர்க்களத்தில் தவிர்க்க முடியாது என்று திமிருடன் நியாயப்படுத்துவதையும் காண்கிறோம்.

எதைத் தவிர்க்க முடியாது என்று போர் வெறியர்கள் கூறுகிறார்களோ அதைத் தவிர்த்தே ஆக வேண்டும் என்று தமது படையினருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிப்பான கட்டளை பிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கொல்லப்பட்டவர், போர்க் களத்திற்கு வராமல் வீட்டில் அமர்ந்திருந்தவர் அல்ல. மாறாக எதிரிப் படையினருக்கு உதவிகள் செய்வதற்காகவே களத்திற்கு வந்தவர், காயமடைந்தவர்களுக்கு உதவவும், உணவு போன்ற தேவைகளை நிறைவேற்றவும் பெண்கள் களத்திற்கு வருவது அன்றைய வழக்கம்.

இத்தகைய பெண்களும் கூட கொல்லப்படலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு போர்க்களத்திலும் புது நெறியை நிலை நாட்டினார்கள்.

உங்களில் யாரேனும் போர் செய்தால் முகத்தைத் (தாக்காது) தவிர்த்துக் கொள்ளட்டும் என்பதும் அவர்கள் தமது படையினருக்கு இட்ட கட்டளை.
நூல் : புகாரி 2560

போர்க்களத்தில் எதிரிகளை எந்த அளவு சின்னாபின்னமாக்க முடியுமோ, முகத்தைக் கோரப்படுத்த முடியுமோ அந்த அளவுக்குச் சிதைப்பது தான் போர்வெறியர்களின் வழக்கமாக அமைந்துள்ளது. ஆனால் எதிரியின் முகத்தைச் சிதைக்காதவாறு போரிடுமாறு கட்டளை பிறப்பித்ததன் மூலம் மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்.
போர்க்களத்தில் கொள்ளையடிப்பதையும் இறந்த உடலைச் சிதைப் பதையும் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தார்கள்.
நூல் : புகாரி 5516

இன்று இன்னொரு நாட்டின் வளத்தைக் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே போர்கள் நடப்பதைக் காண்கிறோம். நியாயமான காரணத்துக்காக போர் செய்யும் போது கூட எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையடிப்பதையும் உடல்களைச் சேதப்படுத்துவதையும் கண்டிக்கிறார்கள்.
எதிரிகளை நெருப்பால் பொசுக்காதீர்கள் என்பதும் அவர்கள் இட்ட கட்டளை.
நூல் : புகாரி 3016

தீவைப்பதும் எதிரிகளை எரித்துக் கொல்வதும் போர் தர்மமாகக் கருதப்பட்ட காலத்தில் நெருப்பால் யாரையும் கொல்லக் கூடாது என்று கட்டளையிட்டார்கள்.

போர் திணிக்கப்படும் போது வாளாவிருந்தால் குடிமக்களைக் காக்கும் கடமையிலிருந்து விலகியவராக நேரிடும் என்பதற்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் செய்தார்கள். எதிரிகளைப் பழி தீர்ப்பதற்காக அவர்கள் போர் செய்ததில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள் மீது சாந்தி நிலவட்டும் - எனக் கூறுவது இஸ்லாமிய முகமன் ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் சிறுபான்மையாக இருந்த யூதர்கள் இந்த வாசகத்தை வேறு விதமாக மாற்றிக் கூறி முஸ்லிம்களைப் புண்படுத்தி வந்தனர். நபிகள் நாயகத்திடமே இவ்வாறு பயன்படுத்தவும் துணிந்தனர்.

அஸ்ஸலாமு என்பதில் லா' வை நீக்கி விட்டு அஸ்ஸாமு' என்று கூறுவர். அஸ்ஸாமு அலைக்கும் என்றால் உங்களுக்கு நாசம் ஏற்படட்டும் என்று பொருள்.

அஸ்ஸலாமு என்று சொல்வது போல் பாவனை செய்து அஸ்ஸாமு எனக் கூறி வந்தனர்.

பொதுவாக இது போன்ற விஷமத்தனங்களைப் பெரும்பான்மை மக்கள் தான் சிறுபான்மை மக்களிடம் செய்வது வழக்கம். சிறுபான்மையினர் இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டால் அவர்கள் கடுமையான விளைவுகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது போன்ற சில்மிஷங்களுக்காகக் கோபம் கொள்ள மாட்டார்கள் என்று யூதர்கள் நன்றாக அறிந்திருந்ததால் தங்கள் வழக்கத்தில் நீடித்து வந்தனர்.

யூதர்களில் ஒரு கூட்டத்தினர் நபிகள் நாயகத்திடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு நாசம் ஏற்படட்டும்) எனக் கூறினார்கள். அவர்கள் கூறியது எனக்கு விளங்கியதால் 'அலைகுமுஸ் ஸாமு (உங்கள் மீதும் அழிவு ஏற்படட்டும்) என்று நான் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆயிஷாவே! நிதானம் வேண்டும். அனைத்து காரியங்களிலும் மென்மையான போக்கையே அல்லாஹ் விரும்புகிறான்' என்று என்னிடம் கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே அவர்கள் கூறியது உங்கள் காதில் விழவில்லையா?' என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அலைகும் (உங்களுக்கும்) என்று நான் கூறி விட்டேனே' என விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 6024

மாமன்னராகவும் மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் நபிகள் நாயகம் இருந்த போது சிறுபான்மைச் சமுதாயம் இப்படிக் கூறத் துணிந்தது எப்படி?

எவ்வித அச்சமும், தயக்கமும் இன்றி வாழ்வதற்கான எல்லா உரிமைகளும் யூதர்களுக்கு வழங்கப்பட்டதால் தான் இவ்வாறு அவர்களால் நடந்த கொள்ள முடிந்தது.

அவர்கள் சொன்ன அதே வார்த்தையைத் தமது மனைவி திரும்பிக் கூறியதைக் கூட இந்த மாமனிதர் கண்டிக்கிறார்.
உங்கள் மீதும் நாசம் ஏற்படட்டும் என்று பதில் கூறாமல், 'உங்கள் மீதும்' என்று மட்டும் பதில் கூறுமாறு வழிகாட்டுகிறார்கள். அவர்கள் பயன்படுத்திய அநாகரீக வார்த்தையைக் கூட அவர்கள் தவிர்க்கிறார்கள்.

மன்னராட்சியில் இது போன்று நடந்து கொண்டவர் உயிர் பிழைப்பதே அரிது என்ற நிலையுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால் நபிகள் நாயகத்தின் பெருந்தன்மை எத்தகையது என்பது விளங்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் பலரது உறவினர்களும் குடும்பத்தாரும் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்தனர்.

இஸ்லாத்தை ஏற்காத தங்களின் உறவினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யலாமா? என்று இஸ்லாத்தை ஏற்றவர்கள் கேட்டபோதெல்லாம் உறவினருக்கான கடமைகளைச் செய்தாக வேண்டும் என்பது தான் நபிகள் நாயகத்தின் அறிவுரையாக இருந்தது.

இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என் தாய் என்னிடம் வந்தார். அவரை என்னோடு வைத்துக் கொள்ளலாமா? என்று நபிகள் நாயகத்திடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் 'ஆம்! கண்டிப்பாக உன் தாயை உன்னோடு சேர்த்துக் கொள்' எனக் கட்டளையிட்டனர் என்று அஸ்மா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 2620, 3183, 5979

ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீதும் மிகவும் கருணையுடன் நடந்து கொள்வது அவர்களின் வழக்கம். மனிதர்கள் புனிதமாக மதிப்பவை சிதைக்கப்படும் போது தான் அதிகமான கோபம் கொள்வது வழக்கம்.
முஸ்லிம்களைப் பொருத்தவரை பள்ளிவாசல் தான் மிகவும் புனிதமானதாகும். அதிலும் மூன்று பள்ளிவாசல்கள் அதிகமான புனிதம் கொண்டவை. அவற்றுள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது திருக்கரத்தால் கட்டிய பள்ளிவாசலாகும். அங்கே நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!

ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்கலானார். மக்கள் அவரை விரட்டலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள்! மென்மையாக நடந்து கொள்ளுமாறு தான் நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்! கடுமையாக நடந்து கொள்ளுமாறு கட்டளையிடப்படவில்லை என்றார்கள்.
நூல் : புகாரி: 220, 6128

.... அவர் சிறுநீர் கழிக்கும் வரை அவரை விட்டு விடுங்கள் என்றார்கள். அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அவரை அழைத்தார்கள். 'இது அல்லாஹ்வின் ஆலயம். இதில் சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களைச் செய்வதோ தகாது. தொழுகை நடத்துவதற்கும் இறைவனை நினைவு கூர்வதற்கும் உரியது என்று அறிவுரை கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்: 429

சிறுநீர் கழிப்பவர் அதை அடக்கிக் கொள்வதற்காகச் சிரமப்படக் கூடாது என்பதற்காக அவர் சிறுநீர் கழிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்து அறிவுரை கூறுகிறார்கள். குறைந்த பட்சம் கடுமையான வார்த்தைகளால் அவரை ஏசியிருக்கலாம். அல்லது அவரையே சுத்தம் செய்து தருமாறு கட்டளையிட்டிருக்கலாம். அறியாமையின் காரணமாக அவர் செய்வதை மென்மையான முறையில் போதனை செய்கிறார்கள்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் கோபம் வராத, நிதானம் தவறாதவர்களாக அவர்கள் இருந்தார்கள் என்பதற்கு இதுவும் காரணமாக உள்ளது.
ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர்


அன்று முதல் இன்று வரை பெண்களை அடிமைகளாகவே ஆண்கள் நடத்தி வருகின்றனர். சில குடும்பங்களில் இதற்கு நேர்மாறான நிலைமை இருக்கலாம். பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப் படுவதில்லை.
மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியரிடம் நடந்து கொண்ட முறை ஆண்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்று ஆயிஷா (ரலி)யிடம் நான் கேட்டேன். அதற்கவர், தமது குடும்பத்தினரின் பணிகளில் ஈடுபடுவார்கள். தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காகப் புறப்படுவார்கள் என விடையளித்தார்.
அறிவிப்பவர் : அஸ்வத்,
நூல் : புகாரி 676, 5363, 6039

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று ஆயிஷா (ரலி)யிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், தமது (கிழிந்த) ஆடையைத் தைப்பார்கள், (பழுதுபட்ட) தமது செருப்பைச் சரி செய்வார்கள், மற்ற ஆடவர்கள் தமது வீட்டில் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வார்கள் என்று விடையளித்தார்.
அறிவிப்பவர் : உர்வா
நூல் : முஸ்னத் அஹ்மத் 23756, 24176, 25039

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தனிப்பட்ட வேலையைத் தாமே செய்து கொள்வார்கள் என்பதும், தமது மனைவியர் செய்யும் வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள் என்பதும் இவ்விரு நிகழ்ச்சிகளிலிருந்தும் தெரிகிறது.

மனைவியரின் வேலைகளில் ஒத்தாசையாக இருத்தல், காய்கறி நறுக்குதல், வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலைகள் என ஆண்களில் பலர் எண்ணுகின்றனர். இந்தப் பணிகளில் துணை செய்வது ஆண்மைக்கு இழுக்கு எனவும் நினைக்கின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டுப் பணிகள் அனைத்திலும் மனைவியருக்கு ஒத்தாசையாக இருந்துள்ளனர்.

அபீஸீனிய வீரர்கள் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, நபிகள் நாயகத்தின் பின்னால் நின்று நானும் பார்த்துக் கொண்டிருப்பேன். நானாகத் திரும்பும் வரை அவர்கள் எனக்குத் துணை நிற்பார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 5190

என்னுடைய விளையாட்டுத் தோழிகள் என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) வருவார்கள். அவர்களைக் கண்டதும் எனது தோழிகள் மறைந்து கொள்வார்கள். என்னுடன் விளையாடுவதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பி வைப்பார்கள் என்றும் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 6130

ஒரு பயணத்தில் சென்ற போது நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் வைத்தோம். அதில் நான் முந்தி விட்டேன். பின்னர் நான் உடல் பருமனாக ஆன போது மற்றொரு முறை நடந்த ஓட்டப் பந்தயத்தில் அவர்கள் என்னை முந்தி விட்டார்கள். அப்போது 'அதற்கு இது சரியாகி விட்டது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : அபூதாவூத் 2214

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியை வாழ்க்கைத் துணைவியாகவும், தோழியாகவும் தான் நடத்தினார்களே தவிர அடிமையாகவோ, வேலைக்காரியாகவோ நடத்தவில்லை என்பதை இந்நிகழ்ச்சிகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

எளிமையான வாழ்க்கை! ஏழ்மையில் பரம திருப்தி! எதிரிகள் உட்பட அனைவருக்கும் சமநீதி!
அநியாயத்திற்கு அஞ்சாமை!
துணிவு!
வீரம்!
அனைவரையும் சமமாக மதித்தல்!
மிக உயர்ந்த இடத்தில் இருந்தும் அவர்கள் காட்டிய அடக்கம்!
பணிவு!
எல்லையற்ற பொறுமை!
மென்மையான போக்கு!
உழைத்து உண்ணுதல்!
கொண்ட கொள்கையில் அசைக்க முடியாத உறுதி!
தாம் சொன்ன அனைத்தையும் முதலில் தாமே செய்து காட்டியது!
எதிரிகள் உள்ளிட்ட அனைவரையும் மன்னித்தல்!
பிற சமுதாய மக்களிடமும் நல்லிணக்கத்துடன் நடத்தல்!
தமக்கோ தமது குடும்பத்திற்கோ எந்தச் சொத்தையும் சேர்த்துச் செல்லாதது!
தமது உடமைகள் அனைத்தையும் அரசுக் கருவூலத்தில் சேர்த்தது!
அரசின் ஸகாத் நிதியை தாமும் தமது குடும்பத்தினரும் எக்காலத்தி லும் பெறக் கூடாது என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டது!
மனைவியருடன் நல்ல முறையில் குடும்பம் நடத்தியது!
சிறுவர்களிடம் அன்பு காட்டுதல்!

என அனைத்துப் பண்புகளிலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.

இப்பண்புகளில் ஒரு சில பண்புகளை இன்றைக்கும் கூட சிலரிடம் நாம் காண முடியும் என்றாலும் அனைத்துப் பண்புகளையும் ஒரு சேர எவரிடமும் காண முடியாது. நபிகள் நாயகம் தவிர வேறு எந்த வரலாற்று நாயகர்களிடமும் இவற்றைக் காண முடியாது.

இதன் காரணமாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் தமது உயிரை விடவும் அதிகமாக நேசிக்கிறார்கள். உலகம் அவர்களை மாமனிதர் என்று புகழ்ந்து போற்றுகிறது.முற்றும்..

0 comments:

Post a Comment