Thursday, September 2, 2010

மாமனிதர் நபி(ஸல்) - 10 (ஆன்மீகத்தாலும் பலனடையவில்லை)

எழுதியவர்: சகோதரர் மௌலவி. பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள்.

ஆன்மீகத் தலைவர்களாக இருப்போர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே இருக்கின்றனர். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் பசிக்கிறது; தாகம் எடுக்கிறது; நோய் ஏற்படுகிறது; மலஜல உபாதை ஏற்படுகிறது; முதுமை ஏற்படுகிறது. சாதாரண மனிதர்கள் அளவுக்குக் கூட துன்பங்களைத் தாங்க முடியாத அளவுக்கு அதிக பலவீனம் உடையவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர்.

அவ்வாறு இருந்தும் தங்களிடம் கடவுள் அம்சம் இருப்பது போல் மக்களை நம்ப வைக்கின்றனர். தாங்கள் ஆசி வழங்கினால் காரியம் கைகூடும் எனவும் நம்ப வைப்பதில் வெற்றி பெறுகின்றனர். நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள் அனைத்திலும் தங்களைத் தனித்துக் காட்டிக் கொள்கின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை விட அதிக மோசடிக்காரர்களாகவும் இவர்களே திகழ்கின்றனர்.

1.தம்மைக் கடவுளின் அம்சமென வாதிடுவது
2.சாபமிடுவதாக அச்சுறுத்துவது
3.ஆசி வழங்குவதாகக் கூறி ஏமாற்றுவது
4.புலனுக்குத் தெரியாதவை பற்றி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது
5.கட்டளைகள் யாவும் மற்றவர்களுக்குத் தானே தவிர தனக்குக் கிடையாது என்று நடந்து கொள்வது
6.வயிறு வளர்க்கவும், சொத்து சேர்க்கவும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்வது
7.மக்களால் நெருங்க முடியாத உயரத்தில் இருப்பது

என்றெல்லாம் பலவிதமான மோசடிகள் காலங்காலமாக ஆன்மீகத்தின் பெயரால் அரங்கேறி வருகின்றன. இவற்றில் எதையும் செய்யாதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாக எதிர்த்த ஒரே ஆன்மீகத் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்ந்தார்கள்.

ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளைக் கண்டு ஆன்மீகத்தை முழுமையாக எதிர்த்துப் போராடிய தலைவர்கள் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அளவுக்கு ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளை எதிர்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மோசடிகளை எதிர்த்தார்கள்.

ஆன்மீகத் தலைவர்களுக்கு அளவு கடந்த மரியாதை செய்யப்படுவதைக் கண்டு அதை எதிர்த்த எத்தனையோ தலைவர்கள் அது போன்ற மரியாதை தமக்குச் செய்யப்படுவதை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டனர். இதற்கு வரலாற்றில் அநேக சான்றுகள் உள்ளன. நாமே இத்தகையவர்களை இன்றளவும் சந்தித்து வருகிறோம்.

ஆனால், ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே ஆன்மீகத் தலைவர்களுக்குச் செய்யப்படும் அளவு கடந்த மரியாதையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். அறியாத மக்களால் தமக்கே அத்தகைய மரியாதை செய்யப்படும் போது கடும் கோபத்தை வெளிப்படுத்தி அதைத் தடுத்தார்கள். அவர்களை மாமனிதர் என்று வரலாறு போற்றுவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்.

ஆன்மீகத் தலைமை அரசியல் தலைமையை விட வலிமையானது. இந்தத் தலைமையின் காரணமாகத் தான் அரசியல் தலைமை கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வந்தடைந்தது எனலாம்.

இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள பல நூறு ஆன்மீகத் தலைவர்களில் அவர்களும் ஒருவர் என்ற நிலையில் அவர்களின் தலைமை இருக்கவில்லை. மாறாக, முழுமையான அதிகாரம் படைத்த ஒரே ஆன்மீகத் தலைவராக அவர்கள் திகழ்ந்தார்கள்.

உயிரைக் கொடுக்கச் சொன்னால் கூட கொடுப்பதற்குத் தயாரான மக்கள் கூட்டம் அவர்களுக்கு இருந்தது.

அவர்களது எந்த உத்தரவையும் அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் எந்தக் கேள்வியுமின்றி நிறைவேற்றக்கூடிய தோழர்களை அவர்கள் பெற்றிருந்தார்கள்.

அப்படி இருந்தும் ஆன்மீகத் தலைமையைப் பயன்படுத்தி எந்த ஆதாயத்தையும் அவர்கள் பெற்றதில்லை.

முதன் முதல் அவர்கள் செய்த முக்கியமான பிரகடனமே இது தான்!

'எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்' என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூற வேண்டும் என்று இறைவனே தமக்கு கட்டளையிட்டதாகக் கூறினார்கள். இந்தக் கட்டளையை திருக்குர்ஆன் 18:110, 41:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

நம்மைப் போன்றவர்களுக்கு இது சாதாரண பிரகடனமாகத் தோன்றலாம். ஆன்மீகத் தலைவர்களுக்கு இது ஆபத்தான பிரகடனமாகும். 'நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் அல்லர்; நாங்கள் தனிப் பிறவிகள்; தெய்வப் பிறவிகள்; அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்கள்' என்ற பிரகடனத்தில் தான் அனைத்து ஆன்மீகத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது.

இந்த மாமனிதரோ அந்த ஆணி வேரையே பிடுங்கி வீசுகிறார்.

ஏதோ பெயரளவுக்கு இப்படி அறிவித்து விட்டு நடைமுறையில் அதற்கு மாற்றமாக நடந்திருப்பார்களோ என்று யாரும் நினைக்க வேண்டாம். நடைமுறைப்படுத்தாத ஒரு பேச்சையும் பேசாத தலைவர் நபிகள் நாயகம். தமது வாழ் நாள் முழுவதும் இதை நடைமுறைப் படுத்திக் காட்டி விட்டுச் சென்றார்கள்.

அவர்களின் வரலாற்றில் இதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
எந்த மனிதரும் தனது நல்லறத்தால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் தனது அருள் போர்வையை என் மீது போர்த்தினால் தவிர நானும் அப்படித் தான்' என்றார்கள். நூல் : புகாரி 5673, 6463, 6467

மனிதன் தனது வாழ் நாள் முழுவதையும் இறைவனுக்காக அர்ப்பணித்தாலும் அதற்காக சொர்க்கம் எனும் மகத்தான பரிசைப் பெற இயலாது. ஏனெனில் சொர்க்கம் என்பது நினைத்ததெல்லாம் கிடைக்கக் கூடிய அழியாத பெரு வாழ்வாகும். மனிதர்கள் செய்யும் சிறிய செயல்களுக்கு பெரிய அளவில் இறைவன் நன்மைகள் வழங்குவ தால் தான் மனிதன் சொர்க்கம் செல்கிறான் என்பது இதன் கருத்தாகும்.

'நீங்களுமா?' என்று நபித்தோழர்கள் கேட்ட போது 'எனது நிலை வேறு' என்று அவர்கள் பதிலளித்தால் அந்த மக்கள் அதை அப்படியே நம்பியிருப்பார்கள். 'நான் செய்யும் வணக்கத்திற்கு எத்தனை சொர்க்கம் தந்தாலும் போதாது; அந்த அளவுக்கு நான் வணக்கம் புரிகிறேன்' என்று அவர்கள் கூறினாலும் மக்கள் நம்பியிருப்பார்கள்.

நான் சொர்க்கத்துக்குப் போவதாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் அருள் இருந்தால் தான் நடக்கும். எனது செயல்களால் அல்ல என்று அறிவிப்பது ஆன்மீகத் தலைவர்களுக்கு மிகவும் கஷ்டமானதாகும்.

ஆன்மீகத் தலைவர்களிடம் ஆசி பெறுவதை பெரும்பாலான மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் அதற்கு முன் ஒரு பெரியாரிடம் ஆசி பெறுகின்றனர். இவ்வாறு ஆசி பெற்று விட்டு அக்காரியத்தில் இறங்கினால் அக்காரியம் கை கூடும் எனவும் நம்புகின்றனர்.

ஆசி வழங்கும் பெரியார்களும் இதை உள்ளூர விரும்புகின்றனர். அவர்களும் மற்றவர்களைப் போன்ற மனிதர்கள் தான். ஆன்மீகத் தலைவர்களின் காரியங்கள் கூட பெரும்பாலும் கை கூடுவதில்லை. அவர்களுக்கே ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. தங்களிடம் எந்த ஆற்றலும் இல்லை என்பது ஆன்மீகத் தலைவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தாலும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் இந்த நம்பிக்கையையும் ஒழித்துக் கட்டினார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் என்னைப் பற்றி பேசும் போது என்னிடம் எதையும் பிரார்த்திக்கக் கூடாது. என்னிடம் ஆசி கேட்கக் கூடாது. எனக்காக இறைவனிடம் நீங்கள் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என மக்களுக்குக் கட்டளை பிறப்பித் தார்கள். இதன் காரணமாகவே ஒவ்வொரு முஸ்லிமும் அவர்களைப் பற்றி பேசும் போது 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' எனக் கூறுகிறார். எழுத்தில் சுருக்கமாக 'ஸல்' எனக் குறிப்பிடுகிறார். 'அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்' என்பது இதன் பொருள்.

மாபெரும் ஆன்மீகத் தலைவரான தமக்காக மற்றவர்கள் இறை வனிடம் இறையருளை வேண்ட வேண்டும் என்று அவர்கள் கற்றுத் தந்ததால் தான் முஸ்லிம்கள் எந்த மனிதனையும் வணங்குவதில்லை; ஆசி வாங்குவதில்லை. ஆன்மீகத்தின் காரணமாக கிடைக்கும் ஆசி வழங்கும் பெருமையைக் கூட ஒழித்துக் கட்டினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் நபிகள் நாயகத்துக்குப் பக்கபலமாக இருந்தார். அவர்களின் பிரச்சாரத்துக்கும் உறுதுணையாக இருந்தார். அவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது அவரைச் சந்தித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அகில உலகையும் படைத்த இறைவன் ஒரே இறைவன் தான்' என்ற கொள்கையின் பால் அவரை அழைத்தார்கள். அவர் அதனை ஏற்க மறுத்து தமது பழைய கொள்கையிலேயே மரணித்து விட்டார். அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரிதும் கவலைப் பட்டார்கள். அப்போது 'நீர் நினைத்தவரை உம்மால் நேர்வழியில் செலுத்த இயலாது. தான் நாடியவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவான்' என்ற வசனம் (28:56) அருளப்பட்டது. புகாரி: 3884

ஒருவரை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் தமக்கு இல்லை என்று இறைவன் கண்டித்ததாக அறிவித்ததன் மூலம் அல்லாஹ்வின் தூதராக இருப்பதால் அல்லாஹ்வின் அதிகாரம் ஏதும் தமக்கு வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்கள்.

இறைவனை வணங்கும் போது மனிதர்களால் மனம் ஒன்றிப் போய் வணங்க முடிவதில்லை. இறைவனை வழிபடும் நேரத்தில் பலவிதமான எண்ணங்கள் குறுக்கிடுவதை ஒவ்வொருவரும் அனுபவப்பூர்வமாக உணர்கிறோம்.

ஆன்மீகத் தலைவர்களின் நிலையும் இது தான். ஆனாலும் ஆன்மீகத் தலைவர்கள் தங்களைப் பற்றி பொய்யான ஒரு சித்திரத்தை ஏற்படுத்தியுள்ளனர். தாங்கள் இறைவனுடன் இரண்டறக் கலந்து, இறைவனுடன் ஒன்றி வணக்கம் புரிவதாக மக்களை நம்ப வைக்கின்றனர். மக்களும் அதை அப்படியே நம்புகின்றனர்.

இதன் காரணமாகவே இறைவனிடம் தங்கள் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்காமல் ஆன்மீகக் குருமார்கள் வழியாகக் கேட்டு வருகின்றனர்.

இந்தப் பித்தலாட்டத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முறியடித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடையை அணிந்து தொழுதார்கள். அந்த வேலைப்பாடுகளின் பால் அவர்களின் கவனம் சென்றது. தொழுது முடித்ததும் 'எனது இந்த ஆடையை அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு அவரது ஆடையை எனக்கு வாங்கி வாருங்கள்! ஏனெனில் இந்த ஆடை எனது தொழுகையில் ஈடுபாட்டை திசை திருப்பிவிட்டது' என்று கூறினார்கள். புகாரி: 752, 373, 5817

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கவனம் ஆடையின் வேலைப்பாடுகளில் சென்றது அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாகும். 'நான் உங்களைப் போன்றவன் அல்ல. என்னை எதுவும் கவனத்தைத் திருப்ப முடியாது' என்று அந்த மக்களை நபிகள் நாயகம் (ஸல்) ஏமாற்ற விரும்பவில்லை. மாறாக தொழுகையில் ஈடுபடும் போது உங்கள் கவனம் எவ்வாறு திரும்புமோ அது போல் என் கவனமும் திரும்பும். இந்த ஆடையின் வேலைப்பாட்டைப் பார்த்தவுடன் அதன் பால் என் கவனம் சென்று விட்டது' என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்.

நீண்ட நேரம் தொழுகை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தொழுகை நடத்த நிற்கிறேன். அப்போது பின்னால் நின்று தொழும் பெண்ணுடைய குழந்தையின் அழுகுரல் எனக்குக் கேட்கிறது. அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் தரக் கூடாது என்பதற்காகத் தொழுகையைச் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல் : புகாரி 707, 708, 709, 710, 868

தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது உங்களுக்குத் தான் கவனம் வேறு பக்கம் செல்லும். என் கவனம் தொழுகையில் மட்டுமே இருக்கும் என்று அவர்கள் மக்களை நம்ப வைத்திருக்க முடியும். அப்படித் தான் ஆன்மீகத் தலைவர்கள் மக்களை நம்ப வைக்கின்றனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு குழந்தையின் அழுகுரல் தொழுகின்ற தமது கவனத்தை ஈர்ப்பதாகவும், அது தம் காதில் விழுவதாகவும், அதன் காரணமாகவே தொழுகையைச் சுருக்க மாக முடிப்பதாகவும் தாமே முன் வந்து மக்களிடம் அறிவிக்கிறார்கள்.

தாம் ஆன்மீகத் தலைவராக இருப்பதால், 'தாம் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் அல்லர்' என்று இதன் மூலம் அறிவிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அப்போது வழக்கமாகத் தொழுவதை விட அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ தொழுதார்கள். தொழுது முடிந்தவுடன் மக்கள் சுட்டிக் காட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறப்பேன். எனவே நான் மறந்து விட்டால் எனக்கு நினைவூட்டுங்கள்' என்று குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 401

மக்கள் சுட்டிக் காட்டிய போது 'எனது நிலை வேறு; உங்கள் நிலை வேறு' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினால் மக்கள் இதை மறுக்கப் போவதில்லை. இன்று முதல் தொழுகை முறை மாற்றியமைக்கப்பட்டு விட்டது எனக் கூறி நபிகள் தமக்கு மறதி ஏற்பட்டதை மறைத்திருக்கலாம்.

ஆனால், இந்த மாமனிதர் மிக முக்கியமான வழிபாட்டில் தமக்கு மறதி ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இனி மேல் இவ்வாறு ஏற்பட்டால் அதைச் சுட்டிக் காட்டுங்கள் என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 'இதற்குக் காரணம் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதனே' என்கிறார்கள்.

சராசரி மனிதனே தனது தவறை சபையில் ஒப்புக் கொள்ளத் தயக்கம் காட்டுவதையும், வெட்கப்படுவதையும் காண்கிறோம். இந்த ஆன்மீகத் தலைவரோ தாமும் மற்றவரைப் போன்ற மனிதர் தாம் என்பதை எந்த நேரத்திலும் பகிரங்கப்படுத்திட தயக்கம் காட்டாதவராக இருக்கிறார்கள்.

'நானும் உங்களைப் போன்ற மனிதனே' என்று பிரகடனம் செய்துவிட்டு அதை எந்த அளவுக்கு உறுதியாகக் கடைப்பிடித்தார்கள் என்பதற்கான மற்றொரு சான்றையும் பாருங்கள்.

தாம்பத்திய உறவுக்குப் பின்னர் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளை.

ஒரு நாள் வைகறைத் தொழுகையை நிறைவேற்ற நபிகள் நாயகம் (ஸல்) வந்தனர். அனைவரும் வரிசையில் நின்றனர். தொழுகைக்குத் தலைமை தாங்கிட நபிகள் நாயகமும் நின்றனர். தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின் குளிக்கவில்லை என்பது அப்போது தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே மக்களிடம் 'அப்படியே நில்லுங்கள்' எனக் கூறி விட்டுச் சென்றார்கள். குளித்து விட்டு தலையில் தண்ணீர் சொட்ட வந்து தொழுகையை நடத்தினார்கள். நூல் : புகாரி 275, 639, 640

அவர்கள் குளிக்கவில்லை என்பது அவர்களுக்கு மட்டுமே தான் தெரியும். என்ன இவர்கள் இவ்வளவு கவனமில்லாமல், அக்கரையில்லாமல் தொழுகை நடத்த வந்து விட்டார்களே என்று மக்கள் நினைப்பார்கள் என்றெல்லாம் இந்த மாமனிதர் வெட்கப்படவில்லை. மற்றவர்களைப் போலவே தாமும் ஒரு மனிதர் தாம்; மற்றவருக்கு ஏற்படுவது போலவே தமக்கும் மறதி ஏற்படும் என்பதை மக்கள் மன்றத்தில் பகிரங்கப்படுத்துகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் இருந்தார்கள். அதன் காரணமாக தலைநகரில் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறும் பொறுப்பையும் அவர்கள் சுமந்து கொண்டார்கள்.

தலைநகரான மதீனாவைப் பொருத்த வரை அவர்கள் தாம் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்கள்.

தலைமை நீதிபதியாக இருப்பதுடன் ஆன்மீகத் தலைவராகவும் இருப்பதால் தமது தீர்ப்பில் எந்தத் தவறும் நிகழாது என்று அவர்கள் வாதிட்டிருக்க முடியும். அதை அப்படியே மக்கள் நம்பியிருப்பார்கள். நபிகள் நாயகத்தின் தீர்ப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் வேண்டுமானால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதலாம். அவரும் கூட வெளிப்படையாக அதை விமர்சிக்க முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செல்வாக்கு இருந்தது. ஆனால் இந்த மாமனிதர் என்ன சொன்னார்கள்?

'மக்களே! என்னிடம் நீங்கள் வழக்கு கொண்டு வருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட தனது வாதத்தை நிலை நாட்டும் திறமை பெற்றவராக இருக்கிறார். நானும் அதைக் கேட்டு அதை உண்மை என நம்பி தீர்ப்பளித்து விடுவேன். ஆனால் மறுமையில் அவனுக்கு அது கேடாக முடியும்' என்று எச்சரித்தார்கள். நூல் : புகாரி 2458, 2680, 6967, 7169, 7181, 7185

ஒருவரது வாதத் திறமையைப் பார்த்து நீங்கள் எவ்வாறு தவறான முடிவுக்கு வருவீர்களோ அது போலவே நானும் முடிவு செய்யக் கூடியவன் தான். எனது தீர்ப்புக்கள் வாதங்களின் அடிப்படையில் தான் அமையுமே தவிர எனது ஆன்மீக சக்தியினால் உண்மையைக் கண்டுபிடித்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக இருக்காது என்று எந்த ஆன்மீகத் தலைவராவது அறிவித்ததுண்டா?

தான் கூறியது தவறு என்று அம்பலமான பிறகும் அதற்கு ஆயிரம் வியாக்கியானம் கூறி சமாளிக்கும் ஆன்மீகத் தலைவர்களிடையே யாரையும் ஏமாற்றாத, மக்களின் அறியாமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாத தலைவராக இவர்கள் காட்சி தருகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்போது தான் மதீனா நகருக்கு வந்த நேரம். அங்கே பேரீச்சை மரங்கள் தான் பிரதான உற்பத்தியாக இருந்தது. அங்குள்ள மக்கள் மரங்களுக்கிடையே மகரந்தச் சேர்க்கை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) கண்டனர். 'என்ன செய்கிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார்கள். 'இப்படிச் செய்வது தான் வழக்கம்' என்று அவர்களிடம் அம்மக்கள் எடுத்துக் கூறினார்கள். 'இதைச் செய்யாதிருந்தால் நன்றாக இருக்குமே' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களும் இவ்வாறு செய்வதை விட்டு விட்டனர். அந்த வருடத்தின் மகசூல் குறைந்து விட்டது. இது பற்றி நபிகள் நாயகத்திடம் அவர்கள் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நானும் ஒரு மனிதன் தான். உங்கள் வணக்க வழிபாடுகள் குறித்து நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். எனது சொந்த அபிப்பிராயத்தின் படி ஏதேனும் கட்டளையிட்டால் நானும் மனிதனே' என்றார்கள். நூல் : முஸ்லிம் 4357, 4358
இறைவனின் தூதர் என்ற முறையில் வணக்க வழிபாடுகள், தக்கவை, தகாதவை பற்றிக் கூறினால் அதை மட்டும் பின்பற்றுங்கள்! மனிதன் என்ற முறையில் எனது அபிப்பிராயத்தைக் கூறினால் அது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்று பிரகடனம் செய்ததன் மூலம் தாம் எப்போதுமே மனிதர் தான். மனிதத் தன்மை அடியோடு நீக்கப்பட்ட தெய்வப்பிறவி அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக அறிவிக்கிறார்கள். மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மண விழாவுக்குச் சென்றார் கள். அங்குள்ள சிறுமிகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்தைக் கண்டதும் 'நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக் கிறார்' என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர் கள் 'இவ்வாறு கூறாதே! முன்னர் பாடியதையே பாடு' என்றார்கள். நூல் : புகாரி 4001, 5147

சபைகளில் தலைவர்களைக் கூடுதல் குறைவாகப் புகழ்வது வழக்கமான ஒன்று தான். ஆன்மீகத் தலைவர் என்றால் இது இன்னும் சர்வ சாதாரணம். ஆனால் இந்த மாமனிதர் அந்த மக்களின் அறியாமையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

நாளை நடப்பதை மனிதன் எப்படி அறிய முடியும்? கடவுள் மட்டும் தானே அறிவார். இந்தத் தன்மை தனக்கு உள்ளதாக இவர்கள் பாடுகிறார்களே என்பதற்காகத் தான் பாட்டை நிறுத்தச் செய்கிறார்கள். 'உங்களுக்கு எப்படி நாளை நடக்கவுள்ளது தெரியாதோ அது போலவே எனக்கும் தெரியாது' என்று இதன் மூலம் அறிவிக்கிறார்கள்.

தமக்கு மறைவானது எதுவும் தெரியாது என்பதை மக்கள் மன்றத்தில் வைத்து விடுமாறு இறைவன் கட்டளையிட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதைத் திருக்குர்ஆன் 6:50, 7:188 வசனங்களில் காணலாம்.

'அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை' என்று (முஹம்மதே!) கூறுவீராக! 'குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக! (திருக்குர்ஆன் 6:50)

'அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக! (திருக்குர்ஆன் 7:188)

எவ்வளவு அற்புதமான முழக்கம் என்று பாருங்கள்! புகழ்ச்சியை வெறுப்பது போல் சிலர் காட்டிக் கொள்வர். ஆனால் உள்ளூர அதை விரும்புவார்கள். இந்த மாமனிதர் தமக்கு மறைவான விஷயம் தெரியாது என்று கூறியது மட்டுமின்றி தமக்கெதிரான ஆதாரத்தையும் தாமே எடுத்துக் காட்டுகிறார்கள். தம்மை வரம்பு மீறி புகழக் கூடாது என்று கூறி அதற்கு ஆதாரத்தையும் தமக்கெதிராக எடுத்து வைத்த அற்புதத் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்கிறார்கள்.

மறைவானது எனக்குத் தெரிந்திருந்தால் எந்தக் கெடுதியும் எனக்கு ஏற்பட்டிருக்காது. கெடுதி ஏற்படப்போவதை முன்கூட்டியே அறிந்து அதைத் தவிர்த்திருப்பேன். வெறும் நன்மைகளாகவே நான் அடைந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் நடக்கவில்லையே? உங்களைப் போலவே நானும் துன்பங்களைச் சுமக்கிறேன்; நாடு கடத்தப்பட்டேன்; கல்லடி பட்டேன்; வறுமையில் வாடுகிறேன்; நோய் வாய்ப்படுகிறேன். இதிலிருந்து எனக்கு மறைவாகவுள்ள எதுவும் தெரியாது என்பதை விளங்க மாட்டீர்களா? என்று மக்களிடம் அறிவிக்குமாறு இறைவன் தமக்குக் கட்டளையிட்டதாகக் கூறுகிறார்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஆரம்ப நேரம். அன்றைய மக்களால் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷிக் குலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தவர்கள் என்பதால் மரியாதைக்குரியவர்களாக இருந்தனர்.

ஆனாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கைப் பிரச்சாரத்தை முக்கியப் பிரமுகர்களும், உயர் குலத்தவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களைச் சாதாரண மக்கள் தான் அதிக அளவில் ஏற்றிருந்தார்கள்.

இந்த நிலையில் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொள்கை விளக்கம் அளித்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இவ்வாறு கொள்கைப் பிரச்சாரம் செய்த போது நடந்த நிகழ்ச்சி பின் வருமாறு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம்

http://onlinepj.com/books/mamanithar/
http://iniyamaarkam.blogspot.com/

0 comments:

Post a Comment