Tuesday, February 15, 2011

அவதூறுகளுக்கு அப்பால்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.., எல்லாம் வல்ல ஏக இறைவனான அல்லாஹ்வின் அளப்பரிய கிருபையினால் இன்று நாம் இணைவைத்தல் மற்றும் இன்னபிற வழிகேடுகளை விட்டும் விலகி இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் அறியும் வாய்ப்பை பெற்றுள்ளோம்.

ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னாள் சென்றால் முஸ்லிம்களுக்கு குர்ஆன் மட்டுமே தெரியும். அதுவும் நூற்றுக்கு இரண்டு மூன்று சதவீதத்தினர்களுக்கு மட்டுமே குர்ஆனை ஓதத் தெரிந்து இருந்தார்கள்.

அவர்களிடம் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பு பற்றிய எந்த அறிவும் அப்போது இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அந்த கால கட்டத்தில் குர்ஆன் மொழிபெயர்ப்புகளோ ஹதீஸ் மொழிபெயர்ப்புகளோ இன்று இருக்கும் நிலையைப் போல் இல்லை.


ஆலிம்கள் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பிய காலம். மார்க்கம் என்ற பெயரில் இந்த ஆலிம்கள் செய்த காரியங்கள் ஒரு சாதாரண முஸ்லிம் சிறிது நேரம் சிந்தித்தால் விளங்கிவிடும். அதற்கென்று தனியாக ஒரு பட்டியல் தேவை.

நாம் பல வருடங்களாக பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். இந்த மக்கள் தங்கள் அறிவையும் பொருளாதாரத்தையும் மார்க்கத்திற்கு புறம்பான துளியும் சம்பந்தமில்லாத காரியத்திற்கு செலவழிப்பதை காணலாம். இதை தடுக்க வேண்டிய ஆலிம்கள் அதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் கண்டும் காணமல் இருப்பதை பார்க்கிறோம்.

இந்த ஆலிம்கள் பெயரளவில் தான் முஸ்லிம்களாக வாழ்கிறார்கள். இவர்களே இப்படி இருந்தால் மார்க்கம் தெரியாத அன்றைய முஸ்லிம்களின் நிலை. இந்த ஆலிம்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆடம்பரத்திற்காக பெருமைக்காக மார்க்கத்தை மறைத்து உலக ஆதாயம் தேடினார்கள். இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இன்று அல்லாஹ் இதுபோன்ற அறியாமையில் இருந்தும் நம்மை காத்தான். குர்ஆன் என்றால் என்ன ஹதீஸ் என்றால் என்ன மொத்தத்தில் இஸ்லாம் என்றால் என்ன என்று சாதாரண முஸ்லிம்கள் கூட அறியும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்தினான். குர்ஆன் மொழிபெயர்ப்புகளும் ஹதீஸ் மொழிபெயர்ப்புகளும் இன்று நம் கையில் இருக்கிறது.

ஆனால் சில அல்ல பல மூட கோமாளிகள் இன்னும் உளறிக் கொண்டிருக்கிறார்கள் மார்க்க மேதை என்ற பெயரில். அது என்னவென்றால் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பை ஒரு சாதாரண முஸ்லிம் வாசித்தால் அவர்களால் விளங்க முடியாது என்று. ஆனால் அனைத்தையும் அறிந்த அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான் இந்த குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம் படிப்பினை பெறுவோர் உண்டா என்று.

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஏகத்துவ தென்றல் அல்லாஹ்வின் அளப்பரிய கிருபையினால் வீச ஆரம்பித்தது. அந்த தென்றலின் சுகத்தை பலர் உணர ஆரம்பித்தார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு கடந்த முப்பது வருடங்களாக இந்த தென்றலை பல பகுதிகளுக்கு சாதாரண முஸ்லிம்களுக்கு கொண்டு சென்றது.

இந்த ஜமாத்தை நிறுவி இஸ்லாத்தையும் அதன் ஓரிறைக் கொள்கையையும் உயிர் மூச்சாகக் கொண்டு இன்றளவும் இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை கட்டுக் கோப்பாக ஒரு சாதாரண முஸ்லிமாக ஜமாத்தின் பல உறுப்பினர்களில் ஒரு உறுப்பினராக இருந்து சேவையாற்றி வரும் மௌலவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக. அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.

மார்க்கத்தை வைத்து வயிறு வளர்த்த ஆலிம்கள் என்ற பெயரில் திரிந்தவர்களுக்கு இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாவு மணி அடித்தது. இதன் காரணமாக பொங்கி எழுந்த இந்த உலமா பெருமக்கள்??? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மீதும் மௌலவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் மீதும் அதிகமான விமர்சனங்களையும் மற்றும் அவதூறுகளையும் பரப்பினார்கள். ஆனால் இதில் எந்த அடிப்படையும் இருக்காது ஆதாரமும் இருக்காது.

இந்த ஒன்றுக்கும் உதவாத ஆலிம்கள் இதுவரை மார்க்கத்திற்காக ஒரு போராட்டத்தையோ அல்லது முஸ்லிம்களுக்காக ஒரு போராட்டத்தையோ செய்தது கிடையாது. இவர்கள் தங்கள் வாழ்நாளை மௌலூது ஓதுவதிலும் பாத்திஹா ஓதுவதிலும் சந்தனம் பூசுவதிலும் சந்தனக் கூடு இழுப்பதிலும் கழிப்பவர்கள். இவர்கள் தங்கள் நிலையை குறித்து ஆராய வேண்டும்.

ஆனால் அல்லாஹ்வின் உதவியோடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கப் பணியோடு சமூகப் பணியையும் சேர்த்து செய்தது. அத்துடன் எதிர்தரப்பினர்களின் விமர்சனங்களுக்கும் அவதூறுகளுக்கும் அவ்வப்போது தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது இந்த ஜமாஅத். ஏனென்றால் இந்த ஜமாத்திற்கு இருக்கிற பணிகள் போதாத காரணத்தினால் இந்த எதிர்தரப்பினர்கள் அளிக்கும் கூடுதல் பணி இது.

எனவே இது போன்ற அவதூறுகளும் ஆரோக்கியமற்ற விமர்சனங்களும் இந்த அறிவிளிகளால் ஏறபடுவது எதிர்பார்த்த ஒன்று தான். இவைகளையும் இவர்களையும் அலட்சியம் செய்வோம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகளில் பங்கு கொள்வோம். நம் முஸ்லிம் சமுதாயத்தை பலமான சமுதாயமாக கல்வி வேலைவாய்ப்பில் முன்னேறிய சமுதாயமாக மாற்றுவது நம்மீது உள்ள கடமை. அல்லாஹ்வின் உதவியால் நாம் சாதனை படைப்போம். தவ்ஹீத் ஜமாஅத் சேவைகளுக்கு அரணாய் இருப்போம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்


  1. இஸ்லாம் ஒரு அறிமுகம் என்ற நிகழ்ச்சியை முதல் முறையாக தொலைக்காட்சி வாயிலாக அறிமுகப்படுத்தியது.
  2. ஒவ்வொரு வருடமும் ரமளானில் தொடர் உரைகள் மூலமாக முஸ்லிம்களுக்கு சொற்பொழிவாற்றுதல்.
  3. உண்மையான இஸ்லாத்தை முஸ்லிம்கள் அறிவதற்காக ஒவ்வொரு மாதமும் பல ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்துவது.
  4. வரதட்சணை ஒழிப்பு கருத்தரங்குகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தி வரதட்சணை என்ற சமூக கொடுமைக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  5. எந்த அரசு வந்தாலும் தவறை சுட்டிக் காட்டும் முதுகெலும்புடன், இடஒதுக்கீட்டிற்காக வரலாறு கண்டிராத போராட்டங்களை நடத்தி, முஸ்லிம்களுக்கு இறைவனின் நாட்டத்தால் இடஒதுக்கீடு பெற்றுத் தந்து 50 ஆண்டு கால வரலாற்றை மாற்றியமைத்தது.
  6. தற்கொலைக்கு காரணமான கொடிய வட்டிக்கு எதிராக மக்களிடையே பிரச்சாரங்கள் செய்வது.
  7. வட்டிக்கு எதிரான பிரச்சாரத்தோடு மட்டும் நின்று விடாமல் உதவி செய்யும் விதமாக ஜமாஅத் மூலம் பல கிளைகளில் வட்டியில்லா கடன் வழங்குவது. இன்னும் பல கிளைகளில் இதை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வது.
  8. முஸ்லிம்களுக்காக உணர்வு என்ற வார இதழையும், ஏகத்துவம் என்ற மாத இதழையும் முஸ்லிம் பெண்களுக்காக தீன்குலப் பெண்மணி என்ற மாத இதழையும் நடத்துவது.
  9. உயிர்காக்கும் இரத்ததான உதவி செய்தல்.
  10. ஏழைகளுக்காக பல ஊர்களில் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்கள்.
  11. பித்ரா என்றால் என்னெவென்று தெரியாமல் இருந்த முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் முஸ்லிம்களிடம் இருந்து பித்ரா தொகை வசூல் செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தல்.
  12. ஒவ்வொரு வருடமும் பல கிளைகள் மூலமாக கூட்டு குர்பானி ஏற்பாடு செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தல்.
  13. சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவி செய்தல். அவர்களுக்காக களத்தில் இறங்கி நிதி திரட்டி உதவி செய்தல்.
  14. பொது மற்றும் நடமாடும் நூலகங்களை ஏற்படுத்தி அதன்மூலம் சிடி மற்றும் நூல்களை தங்கள் இல்லத்திற்கு இலவசமாக எடுத்துச் சென்று படிக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல்.
  15. இஸ்லாத்தை தழுவும் சகோதரர்களுக்கு தாவா மையங்களை ஏற்படுத்தி அதன்மூலம் இலவசமாக மார்க்க கல்வி பயிற்றுவித்தல்.
  16. இஸ்லாத்தை அறிய விரும்பும் சகோதரர்கள் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினால் அவர்களுக்கு இலவசமாக நூல்களை அனுப்பி கொடுத்தல்.
  17. தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீடியாக்களின் மூலமாக உள்ளூர், வளைகுடா மற்றும் பிற நாடுகளில் வாழும் சகோதரர்களுக்காக மார்க்க நிகழ்சிகளை ஒளிபரப்புதல்.
  18. முஸ்லிமல்லாதவர்களுக்காக இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியும் முஸ்லிம்களுக்காக இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியும் பல ஊர்களில் நடத்தி வருவது.
  19. அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கு கிடைக்கும் உதவிகளை அறிய விரும்புபவர்களுக்கு உதவி செய்தல்.
  20. முதியோர் உதவித்தொகை, ஏழைப் பெண்கள் திருமண உதவித்தொகை, விதவைகளுக்காக உதவித்தொகை மற்றும் பிரசவ உதவித்தொகை மற்றும் இதுபோன்ற அரசு நலத் திட்டங்களை அறியாத மக்களுக்கு வழிகாட்டுதல்.
  21. வீட்டிலிருந்து சம்பாதிக்க வழிமுறைகளை விளக்குதல்.
  22. சமூகத்திற்கு பாதிப்பு, அநீதி, அரசாங்க அடக்குமுறை இவைகளுக்கு எதிராக களமிறங்கி போராடுவது.
  23. இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இழைக்கப்படும் கொடுமைக்காக சக்திக்கு உட்பட்டு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தல்.
  24. இதுபோன்ற பணிகள் சிறப்பாக நடக்க நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிகளை உங்கள் ஊரிலும் செயல்படுத்தவும் உங்களுக்காக உழைக்கவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத தயாராக இருக்கிறது. அதற்காக தலைமையகத்தை தொடர்பு கொண்டால் தகுந்த விளக்கத்தைப் பெறலாம்.
இதுபோன்ற பல மார்க்க மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க வரம்புக்கு உட்பட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி மறுமை வாழ்கையை இலக்காகக் கொண்டு நாணயம் மற்றும் நேர்மையை கடைபிடித்து வெளிநாட்டு அரசாங்கத்திடமோ அல்லது வெளிநாட்டு நிறுவனத்திடமோ பொருளாதார உதவியை பெறாமல் பொதுமக்களுக்காக பொதுமக்களிடமே நிதி வசூல் செய்து அதில் ஒரு பைசாவைக் கூட முறைகேடாக பயன்படுத்தாமல் முறையாகப் பயன்படுத்தி வருகிறது.

எனவே அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மீதுள்ள வெறுப்புகளையும் தவறான எண்ணங்களையும் விட்டுவிட்டு இந்த ஜமாத்தின் செயல்பாடுகளை அறிந்து உங்களை நீங்கள் இந்த ஜமாத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். மேலும் அறிய கிளிக் செய்யவும்.

0 comments:

Post a Comment