Monday, April 30, 2012

மனிதர்களின் கடமைகள் மற்றும் உரிமைகள்-பாகம்-1

முன்னுரை:

இயந்திர வாழ்கையாகிவிட்ட இன்றைய காலத்தில் ஒரு மனிதன் தனக்கும் மற்றவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதை புரிந்து கொண்டால் அவன் வாழ்கையை சரியான முறையில் அமைந்து விடும். இன்றைய அறிவியல் யுகத்தில் பறவைகள் போன்று பறப்பதற்கும் மீன்களை போன்று நீந்துவதற்கும் நமக்குக் கற்பிக்கப்படுகிறது. ஆனால் நிலத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை மட்டும் தெரிந்து கொள்வதில்லை. மனிதனுடைய வாழ்க்கை நெறி தவறிச் செல்வதால் ஏற்படும் பிரச்சனைகள், குழப்பங்கள், உயிரிழப்புகள், சமூக சீர்கேடுகள் என விளைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மனிதர்கள் தன் கடமைகளை சரியாக அறிந்துக் கொண்டால் தன்னுடைய உரிமைகளும் மற்றவர்களின் உரிமைகளும் சரியாக பேணப்படும். மனிதன் தன் மீதுள்ள கடமைகளை அறிந்துக் கொள்வதும் பிறருடைய உரிமைகளை பேணுவதும் தலையாய கடமையாகும்.

வெட்ட வெளியில் காற்றுகளால் புரட்டி அடிக்கப்படும் இறகு போன்றது தான் (மனித) உள்ளங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)

ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்பவர் தான். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் அதற்காக வருந்தி திருந்திக் கொள்பவர்களே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, இப்னுமாஜா, தாரமி, அஹ்மத்) 

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து மனித உள்ளங்கள் எதுவெல்லாம் தமக்கு அழகாக காட்டப்படுகிறதோ அதன் பக்கமெல்லாம் சாயக் கூடும் என்பதும் மனிதன் பாவம் செய்யக் கூடியவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறியலாம். ஆகையால் மனிதன் தம் உள்ளத்தை தீயவற்றின் பால் செல்லாமல் கட்டுப்ப- டுத்தவும் தவறுகளை திருத்திக் கொண்டு இறைவனிடம் பாவ மன்னிப்பும் செய்வதும் அவசியமாகும்.

மேலும் ஒழுக்கச் சீரழிவை நோக்கியும் அழிவின் விளிம்பிலும் நிற்கக் கூடிய மனித சமுதாயம் தன்னைத் திருத்திக் கொள்வதற்கும், இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டு அவனை நெருங்குவதற்கும் இறையச்சம் என்பது மிக அவசியமாகும். இறைவன் மீதுள்ள அச்சம் இல்லாத காரணத்தினால் மனிதன் மனோ இச்சையின் படி வாழ்வதும், ஆபாசத்திற்கு அடிமைப்படுவதும், தவறான முறையில் பிறரை ஏமாற்றி பொருளாதாரத்தை ஈட்டுவதும், ஆட்சி அதிகாரம் புகழ் போன்றவைகளுக்காக தீய வழிகளை கையாள் வதும் மேலும் அவைகளை தவறான முறையில் பயன்படுத்துவதும் என்பன போன்ற பல பாவங்களை செய்கின்றான். இறையச்சம் ஒருவனுக்கு வந்து விட்டால் அவன் வாழ்க்கை சீர்பெற்று விடுகிறது. மனிதன் இறைவன் மீதுள்ள அச்சத்தை அதிகரிக்க அல்குர்ஆன், ஹதீஸ்களை படிப்பதும், இறைவன் விதித்துள்ள கடைமைகளை சரியான முறையில் நிறைவேற்றுவதும் அவசியமாகும்.

நீங்கள் அனைவருமே பொறுப்புடையவர்களாவீர். ஒவ்வொருவரும் தம் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள். தலைவன் ஒரு பொறுப்பாளன். தன் பொறுப்பில் உள்ளவர்கள் அவன் விசாரிக்கப்படுவான். ஒரு ஆண் தன் குடும்பத்தினரின் பொறுப்பாளன். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் விசாரிக்கப்படுவான். ஒரு பெண் அவளது கணவனின் வீட்டிற்கு பொறுப்பாளி. தன் பொறுப்பு பற்றி அவளும் விசாரிக்கப்படுவாள். ஒரு வேலைக்காரனும் கூட தன் முதலாளியின் பொருட்களின் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மேற்கண்ட ஹதீஸிலிருந்து ஒவ்வொருவரும் தன் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்படுவார்கள் என்பதையும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதையும் அறியலாம்.

படைத்த இறைவன் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்திருக்கிறான். மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும், வழிகாட்டுதலையும், வணக்க வழிபாட்டு முறைகளையும் தந்த இறைவன் செய்த அருளுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகள்,
  1. நேர்வழி காட்டிச் சென்ற இறைத்த தூதர் (ஸல்) அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,
  2. பெற்றோர் குழந்தைகள் ஒருவர் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,
  3. கணவர் மனைவி ஒருவர் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,
  4. ஆசிரியர் மாணவர் ஒருவர் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,
  5. ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்கள் குடிமக்கள் ஒருவர் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,
  6. உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமைகள்,
  7. ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள்,
என மனிதர்களாகிய நமக்கு பல கடமைகள் இருக்கிறது.

தொடரும்....

0 comments:

Post a Comment